செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூரைச் சேர்ந்தவர் சரவணன், 42; சிங்கபெருமாள் கோவில் தளபதி நகரில், நான்கு ஆண்டுகளாக இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். 

மார்ச் 4ம் தேதி இரவு, இவரது 'ஷோரூம்' பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 8 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். கடையில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவு காட்சிகளை வைத்து, மறைமலை நகர் போலீசார் கொள்ளையர்களை தேடினர். இந்நிலையில், கோவளம் கடற்கரை பகுதியில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது, சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஐந்து இளைஞர்களை பிடித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விசாரணையில், இவர்கள் கொடுங்கையூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த 'பீஸ்' என்ற கணேசன், 19, மற்றும் கொருக்குபேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த மோகன்ராஜ், 19, ஆகிய இருவரும், சிங்கபெருமாள் கோவில் இருசக்கர வாகன ஷோரூமில் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, மறைமலை நகர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பிடிபட்ட நபர்களின் வாக்குமூலம் என போலீசார் கூறியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில், இரவில் பூட்டப்படும் கடைகளை குறிவைத்து, திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

சிங்கபெருமாள் கோவில் ஷோரூமில் திருடிய பணத்தில் கொடுங்கையூர் பகுதியில் புதிதாக வீடு வாடகைக்கு எடுத்து, கட்டில், பீரோ, ஷோபா, வாஷிங்மிஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியுள்ளனர். மீதமிருந்த பணத்தில் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து செலவழித்துள்ளனர். இருவரின் மீதும் சென்னை மற்றும் புறநகர் பகுதி காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் என, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த மாதம், கூடுவாஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகன ஷோரூமில் இருந்து புதிய இருசக்கர வாகனம் ஒன்றை திருடியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். திருட்டு பணத்தில் வாங்கிய வீட்டு உபயோக பொருட்கள், 'பல்சர்' இருசக்கர வாகனம், 23 ஆயிரம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது கூட்டு கொள்ளை, கஞ்சா வைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்காக, மறைமலை நகர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !

இதையும் படிங்க : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. கோரிக்கை மனுவை அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !