மதுரையில் தொடரும் பயங்கரம்….பட்டப் பகலில் ரவுடி ஓட, ஓட, வெட்டிக்கொலை… உயிர் போன பின்பும் கூறு போட்ட மர்ம கும்பல் !!
மதுரையில் பட்டப் பகலில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் ஓட,ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மதுரையின் முக்கிய சாலையான பைபாஸ் ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்தவர் கமல் என்ற கருப்பு. 32 வயது பிரபல ரவுடியான இவர் மீது நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று மதியம், செல்லூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கருப்பு சென்றிருந்தார்.
ஆரப்பாளையம் பை-பாஸ் சாலையில் அவர் நடந்து சென்ற போது வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கருப்புவை வெட்ட முயன்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் கருப்புக்கு 15 இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது.
நிலை தடுமாறிய அவர் சாலையில் சுருண்டு விழுந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை வெட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதனை தொடர்ந்து அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? காரணம் என்ன என்பது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கருப்பு மீது அதிமுக பிரமுகர் கொலை உள்ளிட்ட 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காரில் வந்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.