லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் திடீர் திருப்பம்... ரூ.10 கோடி நகைகள் எங்கே..?
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சி, சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் கடந்த 2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை கும்பலை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் 7 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினார். இந்த கொள்ளையில் திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இதில் முதலில் முருகனின் கூட்டாளி மணிகண்டன் திருவாரூர் அருகே 4-ம் தேதி கைது செய்யப்பட்டான். அவனுடன் வந்த முக்கிய குற்றவாளியும் முருகனின் அக்கா கனகவள்ளியின் மகனுமான சுரேஷ் தப்பியோடி விட்டான்.
மணிகண்டனிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புடைய லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார் சுரேசின் தாய் கனகவள்ளியையும் கைது செய்தனர். கனகவள்ளியிடம் சுரேஷ் கொடுத்து வைத்திருந்த 50 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். மணிகண்டன், கனகவள்ளி ஆகியோரிடம் முருகன் மற்றும் சுரேஷ் பதுங்கி உள்ள இடம் எங்கே? அவர்கள் கொள்ளையடித்த மீதி சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் எங்கே உள்ளது என்று விசாரித்தபோது தங்களுக்கு எது ம் தெரியாது என்று இருவரும் கூறிவிட்டனர்.
அடுத்து முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டிய போலீசார் அவர்களது உறவினர்கள், நண்பர்களை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். முருகனின் அண்ணன் மகனான முரளி மற்றும் உறவினர்கள் பிரதாப், பார்த்தீபன், ரகு உள்ளிட்ட 16 பேரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். கடந்த 1 வாரமாக திருவாரூர் பகுதியில் முகாமிட்ட திருச்சி தனிப்படை போலீசார் சீராத்தோப்பு, கொரடாசேரி, விளமல் என அனைத்து பகுதிகளிலும் உள்ள முருகன் மற்றும் சுரேசின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
இதேபோல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன், சுரேஷ் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடிவந்தனர். இந்நிலையில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சுரேஷ் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் சரண் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசை திருச்சி தனிப்படை போலீ சார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முதல் குற்றவாளியும், லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்தவனுமான திருவாரூர் முருகன் இருப்பிடம் மற்றும் ரூ.10 கோடி தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் வேறு நபர்கள் இதில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்த உள்ளனர்.