லலிதா ஜுவல்லர்சில் கொள்ளையடித்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் !! அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல் !
திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் பரவி வந்த நிலையில் தற்போது 8 பேர் கொண்ட தமிழத்தைச் சேர்ந்த கும்பல் தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
லலிதா நகைக்கடையில் கொள்ளையர்கள் சுவற்றை துளையிட்டு சுமார் 13 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்தும், தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை கண்டு பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து, திருச்சி மாநகரம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருவாரூரில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக நகைகளுடன் சென்று கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சுரேஷ், காவல்துறை சோதனையை பார்த்து சுரேஷ் தப்பி ஓடிவிட்டான்.
மற்றொரு திருடனான மணிகண்டன் மட்டும் காவல்துறையிடம் சிக்கினார். அவரிடம் 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய திருடன் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவாரூர் பேபி டாக்கீஸ் ரோடு பகுதியை சேர்ந்த முருகன் தலைமையில் தான், இந்த கூட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இந்த முருகன் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக சென்னை அண்ணா நகர் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. அந்த சம்பவத்தில் முருகன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதே போல் தப்பி ஓடிய சுரேஷ் பிரபல கொள்ளையன் முருகனின் அக்கா மகன் .திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்தவன் மணிகண்டன் என்பதும், பேபி டாக்கீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவன் சுரேஷ் என்பது காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது. இதில் பிடிபட்ட மணிகண்டன் மற்றும் தப்பியோடிய சுரேஷ் ஆகியோரின் பங்கு நகைதான் நேற்று பிடிபட்டுள்ளது. மற்றவர்கள் அவரவர் பங்குகளை எடுத்துச் சென்றுவிட்டனர்.