பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய டாக்டர்… பேராசிரியை … அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !!
இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த பொள்ளாச்சி கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், கோவையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை உள்ளிட்டோர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர், பேராசிரியை உள்ளிட்ட பல இளம் பெண்ககளை இந்த கும்பல் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் வீடியோவைக் காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே புகார் அளித்த மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்ணை கும்பல் நிர்வாணப்படுத்துவதும், பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இருந்தன. கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ‘அண்ணா என்னை விட்டுருங்கண்ணா, உன்னை நம்பி தானே வந்தேன், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கதறுகிறார். இதேபோல எண்ணற்ற பெண்களை கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ அடிப்படையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் புகார் கொடுத்த மாணவியுடன், ஆனைமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள போலீசார், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் அளிக்கின்றனர்.
இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், கோவையை சேர்ந்த பல்கலை கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்து வரும் போலீசார் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கும்பல் கடந்த 7 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என போலீசார் மறுக்கின்றனர்.