மூதாட்டியிடம் ‘வலிமை’ காட்டிய கர்நாடகா கும்பல்..பைக் முதல் செயின் வரை அட்டகாசம் செய்த இளைஞர்கள்.!!
கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டம் ஜார்ஜிஞோலி நிதியான் பகுதியை சேர்ந்த ஆஷிக் அலி மகன் முகமது ஆஷிப் அலி(23). அதே பகுதி பத்ரோதின் காலனி அப்துல்ஜப்பார் மகன் ஷபி என்ற ஷபிசேக்(30).
இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி செவ்வாய்ப்பேட்டை மூங்கப்பாடி பகுதியை சேர்ந்த மூதாட்டி பத்மாவதி என்பவரது 4 பவுன் செயினை பறித்து சென்றனர். கடந்த 3 ஆண்டுகள் இவர்கள் இருவரும் சேலம் மாநகரில் சூரம்ங்கலம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி பகுதிகளில் மொத்தம் 25 பவுன் செயின்களை பறித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களையும் திருடியுள்ளனர். ஒவ்வொரு முறையும் செயினை பறித்துவிட்டு காரில் தப்பி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கொள்ளையர்கள் 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் சேலம் மாநகரம் மற்றும் தருமபுரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைதான 2 பேரிடமும் இருந்து தங்க செயின்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து 2 பேரும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் சிபாரிசின்பேரில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கமிஷனர் நடவடிக்கை எடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ஆஷிப் அலி, ஷபி என்ற ஷபிசேக் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.