Chennai Custodial Death : நியாயப்படி நீதிப்படி சட்டத்துக்குட்பட்டே நடக்க வேண்டும் - ராஜசேகரின் தாயார் பேட்டி
சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும், நியாயப்படி நீதிப்படி சட்டத்துக்குட்பட்டே நடக்க வேண்டும் என விசாரணைக் கைதியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் என்பவரை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சமீபத்தில் விசாரித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ராஜசேகர் விசாரணையில், செங்குன்றத்தில் உள்ள தனது கூட்டாளியிடம் அந்த நகைகள் இருப்பதாக போலீசாரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்ததில், நகைகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து நேற்று காலை விசாரணை நடத்தி உள்ளனர் காவல்துறையினர். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்று சிகிச்சை பெறச்செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அழைத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து ராஜசேகரின் உறவினர்கள் மருத்துமனையில் முன்பு ஒன்றுகூடி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இரண்டு நாள் சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் ராஜசேகரை காவல்துறையினர் அடைத்துவைத்திருந்ததாகவும் அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று, விசாரணை கைதி மரணம் அடைந்ததை குறித்து நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் மற்றும் எவ்வாறு விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ன், காவலர் சத்திய மூர்த்திய ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் மாஜிஸ்திரேட் முன்பும் விசாரணை நடைபெற்றது.
விசாரணை கைதி மரணம் .. நள்ளிரவு வரை நடந்த விசாரணை.. காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் இடைநீக்கம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, இறந்த ராஜசேகரின் தாயார், ஒவ்வொரு காவலரிடமிருந்து தலா 2 லட்சம் வீதம் 10 லட்சம் வாங்கித்தருவதாக வழக்கறிஞர் கூறினார். எதுவாக இருந்தாலும் நியாயப்படி, நீதிப்படி சட்டத்துக்கபட்டே நடக்க வேண்டும் என தெரிவித்தார். மகனின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மரணமடைந்த ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், உடலில் உள்ள காயங்களால் அவர் இறக்கவில்லை என்றும், உடலில் மொத்தம் 4 காயங்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திசுக்கள் மற்றும் வேதியியல் குறித்த ஆய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!