நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். 

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு நடிகர் சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின், பிரதான வழக்கை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.