மொத்தமாக இல்லாவிட்டாலும் ஒரு சில வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்தாலே போதும் தங்களது வெற்றியை உறுதி செய்து விடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளது விஜய் மக்கள் இயக்கம்..
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுமார் நூற்று எழுபது பேர் சுயேட்சையாக களமிறங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற்று விஜய்க்கு ஆச்சரியத்தையும், மற்ற கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் தந்தனர்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இதோ நகர்ப்புற தேர்தலில் போட்டியிடவும் தயாராகிவிட்டது விஜய்யின் மக்கள் இயக்கம். அவர்கள் தேர்தல் கமிஷனிடம் தங்களுக்கு ‘ஆட்டோ சின்னம்’ ஒதுக்கும்படி கேட்டார்கள். ஆனால் ‘உங்கள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. எனவே பொது சின்னம் ஒதுக்க முடியாது.’ என்று கையை விரித்துவிட்டது.
இதில் கடுப்பாகிவிட்டது விஜய் டீம். ஆக்சுவலாக ஆட்டோ சின்னம் கிடைத்திருந்தால், வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ டிரைவராக நடித்திருந்த சீன்ஸ், பாடல்கள் ஆகியவற்றை போஸ்டர் மற்றும் வீடியோக்களாக்கி மாஸாக பிரசாரம் செய்து வாக்குகளை ஈர்க்கும் முடிவில் இருந்தனர். மேலும், பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்ததையும் உள்ளே இழுத்துவிட்டு ‘அண்ணா! தலைவா!’ என்று அவரது வாக்குவங்கியையும் அள்ள நினைத்திருந்தனர்.
தற்போது சுயேட்சை வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ சின்னம் கேட்குமாறு கூறி இருந்தார். இதையடுத்து நாமினேஷன் செய்த விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட மூன்று சின்னங்களில் ஆட்டோவை தேர்ந்தெடுத்துள்ளனர்..

இந்நிலையில் மதுரை 88-வது மாநகராட்சி வார்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
