படப்பிடிப்பு தளத்தில் ஹீரோவுடன் தகராறு! சாய் பல்லவி மீது குவியும் புகார்!
பிரேமம் புகழ் சாய் பல்லவிக்கும், தெலுங்கு நடிகர் ஷர்வானந்துக்கும் இடையே ஈகோ மோதல் வெடித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. தமிழரான இவர் அந்த ஒரே படத்தின் மூலமாக, மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலம் ஆனார்.
தற்சமயம், தெலுங்கில் இவருக்கு அதிக படங்கள் புக் ஆகியுள்ளன. வரிசையாக தெலுங்கு படங்களை நடித்து தரும் இவர், சமீபத்தில் நடித்த ஃபிடா படத்தில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில், சாய் பல்லவி, தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் ஜோடியாக, பாடி பாடி லேச்சே மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹனு ராகவாபுடி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெறுகிறது.
ஆனால், இந்த படத்தின் செட்டில் சாய் பல்லவிக்கும், ஷர்வானந்துக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்பட்டுள்ளது. சாய் பல்லவியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ஷர்வானந்த் திடீரென யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டாராம். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியும் ஷர்வானந்த் திரும்பி வரவில்லையாம். இதுபற்றி சாய் பல்லவி மன்னிப்பு கேட்டால் மட்டுமே படப்பிடிப்புக்கு திரும்பி வருவேன் என்று ஷர்வானந்த் பிடிவாதம் காட்டுகிறாராம்.
எனினும், சாய் பல்லவி இதற்கு இறங்கி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாய் பல்லவி மீது நாளுக்கு நாள் இத்தகைய குற்றச்சாட்டு கூறப்படுவது வழக்கமாகி உள்ளது. ஏற்கனவே கனம் படத்தில் நாக சூர்யாவுடன் நடித்தபோது இதேபோன்ற லடாயில் சாய் பல்லவி சிக்கினார். ரொம்ப சொகுசாக நடந்துகொள்ளும் அவர், சக நடிகர்களை சமமாக மதிப்பதே இல்லை என்றும், நாக சூர்யா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.