சாதியை பயன்படுத்தி பொய் கேஸா போடுறீங்க..? விசிகவுக்கு நடிகை கஸ்தூரி கடும் எச்சரிக்கை..!
தனக்கு எதிராக சாதிய வன்கொடுமை வழக்கை தவறாக பயன்படுத்த உள்ளதாக நடிகை கஸ்தூரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘’விசிகவில் எனக்கு பல நல்ல நண்பர்கள் இருப்பதால் இந்த திறந்த மடலை எழுதுகிறேன். இப்பொழுது கடந்த சில நாட்களாக விசிகவை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும், பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வருவதை காண்கிறேன். நேற்று போலீஸில் பொய் புகார் அளித்துள்ளதாகவும் அறிகிறேன். திருமாவளவனுக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தவும், பட்டியலினத்தனர்களுக்கு எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் சிலர் முயல்கிறார்கள்.
மதநல்லிணக்கத்துக்கு பெயர் பெற்ற இந்தியாவில் சமீபகாலமாக பெருவாரியான மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் போக்கு பெருகி வருகிறது. கடந்த வாரம் முகநூலில் புனிதத்தலங்களை அவமதிக்கும் விஷமிகளை விமர்சித்து பதிவிட்டு இருந்தேன். அந்தப்பதிவில் எந்த தனி நபரையோ சமூகத்தையோ குறிப்பிடவில்லை என்னும் பொழுது திருமாவளவனையும், அவர் சார்ந்த சமூகத்தை பற்றி நான் பதிவிட்டுள்ளேன் என்று தன்னிச்சையாக வந்து வம்பிழுப்பவர்கள், ஏன் அப்படி அவர்களுக்கு தோன்றுகிறது என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்.
எந்தத் தனி நபரையோ, ஜாதியையோ, நான் குறிப்பிடவில்லை எனும் நிலையில் என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் சாதிய வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல். ஒரு வழக்கறிஞர் இப்படி ஆதாரமற்ற பொய் கேஸ் போட்டால் அதற்கான பின்விளைவுகள் என்ன எண்ரு அந்த வழக்கறிஞர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக இஷ்டத்துக்கு எல்லாம் என் கருத்து குற்றம் ஆகி விட்டாது. சும்மா இப்படி வன்கொடுமை சட்டத்தை இஷ்டத்துக்கு கையாண்டால் நாளை உண்மையான பிரச்னையில் யார் உங்களை நம்புவார்கள்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற அவதூறு நடவடிக்கைகள் நான் மிகவும் மதிக்கும் திருமாவளவனுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றே நம்புகிறேன். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் விடுதலை சிறுத்தையினரை உடனடியாக தலைமை கண்டிக்க வேண்டும். தண்டிக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.