தூத்துக்குடியில் பயங்கரம்... ‘கர்ணன்’ பட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... மர்ம ஆசாமிகளுக்கு வலை வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் மீண்டும் இரவு 11 மணி அளவில் அதே தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் படத்தை ஏகபோகமாக வரவேற்று வருகின்றனர்.
கொரோனா பரவலையும் கடந்து தியேட்டர்களில் கர்ணன் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அங்கு நேற்றிரவு 5 பேர் படம் பார்க்கச் சென்றுள்ளனர், அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால் தியேட்டர் நிர்வாகம் டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் மீண்டும் இரவு 11 மணி அளவில் அதே தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 5 பெட்ரோல் குண்டுகளும் தரையில் விழுந்ததால் பெரும் பாதிப்புகள் தடுக்கப்பட்டத்து. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தியேட்டர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய போதை ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.