திருப்பாச்சி மாதிரி அனல் தெறிக்கும் கதையில், மீண்டும் பேரரசுவுடன் இணையப் போகும் விஜய்…!
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயார்த்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையமைப்பில் சர்கார் படத்தின் தீம் மியூசிக் கூட தயாராகிவிட்டது.
சமீபத்தில் கூட சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரம்மாண்டமாகவும் அதிரடியாகவும் தயாராகி வருகிறது இந்த திரைப்படம். சர்காரில் அரசியலும் கலந்திருக்கிறது என்பதால், அளவு கடந்த எதிர்பார்ப்பு இத்திரைப்படத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
அதே சமயம் இன்னொரு கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. விஜய்-ன் அடுத்த படம் என்ன? அது யாருடன்? என்பது தான் அந்த கேள்வி. சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு தகவல், அந்த கேள்விக்கு விடையளிப்பது போல அமைந்திருக்கிறது. அதன் படி விஜய் நடிப்பில் திருப்பாச்சி, சிவகாசி போன்ற அதிரடி சரவெடி திரைப்படங்களை இயக்கிய, பேரரசுவிடம் விஜய் தனக்கான ஒரு கதை தயார் செய்யும்படி கூறி இருக்கிறாராம்
தமிழ் திரையுலகில் விஜய்க்கு நல்ல பெயர் எடுத்து தந்த திரைப்படங்களில் திருப்பாச்சியும் ஒன்று. இப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. அவரிடம் தான் விஜய் தற்போது கதையை தயார் செய்யும்படி கூறி இருக்கிறார். இந்த கதை கிளிக் ஆகும் பட்சத்தில், பேரரசு,விஜய் கூட்டணியில் சரவெடியாக உருவாகப்போகிறது, விஜயின் அடுத்த திரைப்படம்.