நடிகர் விஜய்யை தொடர்ந்து... 8 கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடிதம்...!
விஜய்யின் இந்த முயற்சியை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 8 கோரிக்கைகள் வைத்துள்ளன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று இரவு நடிகர் விஜய் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரை சந்தித்த விஜய் மாஸ்டர் பட ரிலீஸ் விவகாரம் குறித்து பேசியதாக தெரிகிறது. அத்துடன் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். விஜய்யின் இந்த முயற்சியை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 8 கோரிக்கைகள் வைத்துள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை
.தற்பொழுதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக உள்ள இந்த சூழ்நிலையில் புதிய திரைப்படங்களை அமேசான், நெட்பிளஸ் போன்ற நிறுவனங்களின் மூலம் புதிய திரைப்படங்களை திரையிடுவதால் திரையரங்குகளின் வசூல் குறைந்தது மட்டும் அல்லாமல் பொதுமக்கள் வருகையும், கொரோனாவினால் வசூல் பாதிப்பு மட்டுமல்லாமல் பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டது. ஆகவே தாங்கள் அன்புகூர்ந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகள்...
1. தற்போது திரையரங்குகளில் 50% மக்கள் அனுமதிப்பதற்கு பதிலாக 100% மக்களை அனுமதிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
2. திரையரங்குகளினால் கொரோனா பரவியதற்கான எந்த வித அத்தாட்சிகளும் இல்லை, ஆகவே 100% பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
3. தற்போதுள்ள சூழ்நிலையில் 12% மற்றும் 18% GST வரியுடன் 8 உள்ளாட்சி வரி சேரும்போது வரி பலுவினால் திரையரங்குகள் நடத்தமுடியாத சூழ்நிலையும், பொதுமக்கள் வருவதற்கு 89% வரி உயர்வை நீக்கினால் மக்கள் வருகை அதிகரிக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
4. திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது ஒரு ஆண்டாகஉள்ளதை மூன்று ஆண்டுகளாக மாற்றித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
5. புதிய திரையரங்குகளுக்கும் ஏற்கனவே உள்ள திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்றுவதற்கும், பொதுப்பணித்துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று அரசு ஆணையாக பிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
6. தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால் பழைய ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
7. திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
8. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் சினிமா தியேட்டர்களுக்கு கொரோனாவினால் பாதிப்பு காரணமாக கடந்த 8. மாதமாக முடப்பட்டிருந்தது. இந்த கொரோனா பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க அந்த அரசுகள் சில சலுகைகளை அறிவித்துள்ளது
1)ரூ.10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு GST வரி இல்லை என்று அறிவித்துள்ளது
2) தியேட்டர்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
3) மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது
4) நகரங்கள், புற நகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவியும் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு இந்த கடன்களுக்கு வட்டி இல்லை என்று அறிவித்திருக்கிறது இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசு நமது மாநிலத்தில் உள்ள தியேட்டர்களுக்கும் மேற்கண்ட சலுகைகளை வழங்கிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தாய் உள்ளத்துடன் எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் திரையரங்குகளை காப்பாற்றுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.