ரஜினியின் மருமகன், தமிழ் கலைஞர்களின் வயிற்றிலடிக்கிறார்!: வெடிக்கும் புதிய கலாட்டா.
அசுரத்தனமான நடிகர்தான் தனுஷ். ஆனால் கடந்த சில நாட்களாக தயாரிப்பு தரப்புகள் அவர் மீது அதிகப்படியான புகார்களை சொல்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவதோடு, கன்னாபின்னாவென செலவு இழுத்துவிடுவதாகவும் புகார்.
*அசுரத்தனமான நடிகர்தான் தனுஷ். ஆனால் கடந்த சில நாட்களாக தயாரிப்பு தரப்புகள் அவர் மீது அதிகப்படியான புகார்களை சொல்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவதோடு, கன்னாபின்னாவென செலவு இழுத்துவிடுவதாகவும் புகார். பட்டாஸ் பட தயாரிப்பை ரொம்பவே இப்படி பதம் பார்த்துவிட்டாராம் சுள்ளான்.
சிம்புக்கே அண்ணனாகிடுவார் போல!
*தர்பார் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தால் யாருக்கு வருத்தமோ, நஷ்டமோ ஆனால் ரஜினியின் ஒப்பனைக் கலைஞரான பானுவுக்கு செம்ம பாராட்டு மழை. ரஜினியை இளமையாக காட்டிட பெரிதும் முயற்சி எடுத்து, அதில் சக்ஸஸும் அடைந்துள்ளார் என்று பத்திரிக்கைகளும், இணையதளங்களும் பாராட்டுகின்றன.
*பல ஜாம்பவான் இயக்குநர்களும் அந்த காலத்திலேயே இயக்க ஆசைப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இதோ இந்த மாடர்ன் உலகில் மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கிறார். மணியின் படங்களில் பொதுவாக வசனங்கள் மிக குறைவாகவும், ஓரிரு வார்த்தைகளாகவும் தான் இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனோ பக்கம் பக்கமாக வசனம் இருக்கும் காவியம். அதனால் மணி தன் ஸ்டைலில் உருவாக்கி, இந்தப் படத்தின் ஆத்மாவை கொன்றுவிட கூடாது! என்று இணையதளங்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பொங்கி வழிகின்றனர் ஆதங்கத்தில்.
*மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. இப்படத்தினை தயாரிப்பது, விஜய்யின் நெருங்கிய உறவான பிரிட்டோ என்பவர்தான். பாதி ஷூட் முடிந்த நிலையில் படத்தின் வியாபாராமும் பக்காவாக துவங்கிடுச்சு. வெளிநாட்டு உரிமை விலைபோய்விட்டதாம். அது இதுவரையிலான விஜய் படங்களின் விலையை விட சில பல கோடிகள் அதிகமாம்.
படத்துக்கு படம் விஜய்யின் மார்க்கெட் எகிறுவதைப் பார்த்து செம்ம கடுப்பில் இருக்கின்றனர் மற்ற மாஸ் ஹீரோக்கள்.
*ரஜினிகாந்த் என்னமோ ‘தமிழுக்கு உயிர் கொடுப்பேன்! எனக்கு சோறு போட்ட தமிழனை தேரில் உட்கார வைப்பேன்’ என்று டயலாக் பேசி, பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது மருமகனான அனிருத் மீது பகீர் புகார் சொல்கின்றனர் இசைக்கலைஞர்கள் சங்கத்தினர். அதாவது பின்னணி இசைக்கு தமிழக இசைக்கலைஞர்களை பயன்படுத்தாமல், வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்து கம்போஸ் பண்ணுவதையே வழக்கமாக வைத்துள்ளாராம். ரஜினியின் தர்பாரிலும் அதைத்தான் செய்தாராம். இதனால் தங்களின் திறமையை அவமதித்து! வயிற்றில் அடிப்பதாக, அனிருத்தை கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர் பாதிக்கப்படும் இசைக்கலைஞர்கள்.
-விஷ்ணுப்ரியா