‘கே.வி.ஆனந்த் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது’... ரஜினிகாந்த் இரங்கல்...!
இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான விவேக்கின் திடீர் மரணத்தில் இருந்தே திரையுலகினரும், ரசிகர்களும் மீளாத நிலையில், இன்று அதிகாலையே மற்றொரு மரணச் செய்தி பேரிடியாய் இறங்கியது. தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், இயக்குநராக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணமடைந்தார்.
நேற்று நள்ளிரவில் வீட்டிலிருந்த கே.வி. ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாத அவர், தானே காரை ஓட்டிச் சென்று தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும், இன்று அதிகாலை அவருடைய உயிர் பிரிந்தது. இந்த சோகமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர் பலரும் காலை முதலே தங்களுடைய இரங்கலை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.