டாக்டர் பட வெளியீட்டில் வந்த சிக்கல் ; தாராள மனம் கொண்ட சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபுவின் ஓப்பன் டாக்
மாநாடு படத்திற்கு பிரச்சனை என்றதும் இரவில் போன் செய்து உதவி தேவையா என சிவகார்த்திகேயன் விசாரித்ததாக வெங்கட் பிரபு நெகிழ்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25- ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லைசன்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போவதாக சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 25 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதற்கிடையே மாநாடு படம் வெளியாகாது என்னும் தகவல் வெளிவந்தவுடன் திரையுலகினர் பலரும் உதவி செய்ய முன் வந்தனர் என வெங்கட் பிரபு கூறியுள்ளார். இது குறித்து தற்போது பேசியுள்ள வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் குறித்து கூறியுள்ள தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது மிமிக்கிரி கலைஞனாக பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவர் நடித்துள்ள படங்கள் வெளியாகும் இறுதி நேரத்தில் சந்திக்கும் பைனான்ஸ் பிரபலங்களுக்காக தனது சம்பளத்தை விட்டு கொடுப்பது, படம் நடித்து கொடுப்பதாக உறுதி கூறுவது, பண உதவிசெய்வதென தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருப்பவர். அவ்வாறு தான் டாக்டர் படமும் வெளியானது. இவ்வாறு பல பிரச்னைகளை சந்தித்த காரணத்தால் மாநாடு படத்திற்கு பிரச்சனை என்றதும் இரவில் போன் செய்து உதவி தேவையா என விசாரித்ததாக வெங்கட் பிரபு நெகிழ்ந்துள்ளார்.