சிம்பு படம்னாலே சிக்கல் தானோ?... பூதாகரமாக வெடித்த அடுத்த பிரச்சனை...!
இதே பெயரில் இலங்கை தமிழர்கள் குறித்து படமெடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இருப்பதாக எழுத்தாளர் கவிதா பாரதி கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ் திரையுலகில் சிம்பு மீதான சர்ச்சைகள் ஏராளம், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவதில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றச்சாட்டுக்கள் ஏராளம். இதனால் நடுவில் சினிமாவில் நடிக்காமல் கூட சிம்பு இருந்து வந்தார். இதனை அடுத்து பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகே சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை நடித்து முடிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஐசரி கணேசன் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்காக சிம்பு 15 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்தற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இதே பெயரில் இலங்கை தமிழர்கள் குறித்து படமெடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இருப்பதாக எழுத்தாளர் கவிதா பாரதி கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இயக்குநர் திரு.கௌதம் வாசுதேவ் தயாரிப்பாளர் திரு.ஐசரி கணேஷ் தம்பி சிம்பு ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள் மதிசுதா என்பவர் ஈழத்துத் திரைக்கலைஞன்.. இயக்குநர்,நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன் உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். எனினும் ஈழத்திரையுலகம் வணிகரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறார். இப்படியான சூழலில்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார், இது அவரது மூன்றாண்டுகாலப் போராட்டம்.
அந்தப்படத்தின் பெயர் ‘வெந்து தணிந்தது காடு’ மூடப்பட்ட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன..' என்ற விளக்கத்தோடு படத்தின் விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறான் அந்த கலைப்போராளி. இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் மதிக்கு OTT தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள்மீது குற்றம் சுமத்தவில்லை, வேண்டுகோள் விடுக்கிறோம். அறியாமல்கூட யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது. ஒரு எளிய கலைஞனை அங்கீகரித்து பெருந்தன்மையோடு உங்கள் தலைப்பை மாற்றிக் கொண்டால் வரலாறு உங்களை வாழ்த்தும்.. நன்றி என குறிப்பிட்டுள்ளார்.