25 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்... உதவிகளை வாரி வழங்கும் ஷாருக்கான்...!
இந்தியாவில் இந்த கொடிய வைரஸின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. ஒருபுறம் கொரோனா தொற்றில் இருந்து நாட்டை மிக்க உதவும் விதமாக ரத்தன் டாடா, அம்பானி, அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் கோடிகளில் வாரி வழங்கி வருகின்றனர். மற்றொருபுறம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் விதமான மகத்தான சேவை ஒன்றை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் செய்துள்ளார்.
ஷாருக்கானும் அவரது மனைவி கெளரியும் ஏற்கனவே மும்பையில் உள்ள தங்களது 4 மாடி கட்டிடம் ஒன்றை, கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்திக்கொள்ளும் படி மாநகராட்சிக்கு அனுமதி அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் அவரது பிற நிறுவனங்களான ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மீர் பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு கொரோனா நிதி அளித்துள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போரில் நாட்டிற்கு பல்வேறு உதவிகளை புரிந்துவரும் ஷாருக்கான் 25 ஆயிரம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அளித்துள்ளார். மும்பையில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை மீட்க போராடும் மருத்துவ பணியாளர்களுக்காக மாஸ்க், பாதுகாப்பு உடை, கையுறைகள் ஆகியன அடங்கிய பாதுகாப்பு கிட்டை இலவசமாக கொடுத்துள்ளார். ஷாருக்கானின் இந்த உதவியை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.