P.Ranjith: என் ஆபீஸுக்கு வரணும்னா ஒரு தில்லு வேணும்... பா.ரஞ்சித் அதிரடிப்பேச்சு..!
என்னுடன் பேச வேண்டும் என்று யாராவது நினைத்தால் நான் சொல்வதை ஏதோ ஒரு வழியில் ஒப்புக் கொண்டால்தான் என்னுடன் வந்து பேசவே முடியும்.
சாதிய படிநிலை இன்றும் தீவிரமாக கடைபிடிக்கும் பகுதியாக கோவை உள்ளது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் பொதுவெளியில் பேசுவது சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஆண்ட பரம்பரை, ராஜராஜசோழன், பஞ்சமி நிலம் என அவர் பேசியது பல மாதங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதிப்படம் எடுப்பவர் என்கிற முத்திரையும் ஆழப்பதிந்து விட்டது.
இந்நிலையில் கோவையில் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ‘’எனது படங்களில் வேலைபார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை அவர்களும் என்னைப்போலவே சிந்திப்பார்கள் எனக் கூறி அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது; இது அப்பட்டமான உண்மை.
என்னுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தால் என்னுடைய அரசியல் புரிதலை புரிந்து கொண்டால் தான் என் அலுவலகத்திற்கு உள்ளேயே வர முடியும். அப்படி இல்லை என்றால் வர முடியாது. என்னுடன் பேச வேண்டும் என்று யாராவது நினைத்தால் நான் சொல்வதை ஏதோ ஒரு வழியில் ஒப்புக் கொண்டால்தான் என்னுடன் வந்து பேசவே முடியும்.
என்னுடைய அலுவலக கதவு எப்போதுமே திறந்துதான் இருக்கும் யாருக்காகவும் எப்போதும் மூடியதே கிடையாது. ஆனால் என் அலுவலகத்திற்கு வர வேண்டுமென்றால் அவர்களுக்கு ஒரு தில்லு வேண்டும். சினிமா எடுக்கவும் சினிமா இயக்கவும் தான் நான் முழுக்க முழுக்க வந்தேன், அதற்கு காரணம் என்னுடைய அரசியல் சித்தாந்தம் தான்.
என்னுடைய முதல் படத்தில் திரைக்கதையில் நான் செய்த மாற்றங்களால் எனக்கு நிறைய நெருக்கடி வந்தது, அதனால் எனக்கு கிடைத்த மன உளைச்சல் அதிகம். மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிக்கு அந்த படம் முடிந்தவுடன் பெரிய வரவேற்பு கிடைக்கும் என நினைத்தேன். என்னுடைய படத்தின் கதாப்பாத்திரம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ, அதேபோல் என்னுடைய படத்தில் நடிப்பவர்களுக்கு ஏகப்பட்ட சிக்கலும் ஏற்பட்டது.
ரஞ்சித் படத்தில் வேலை செய்தால் இவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என அதிக இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய உதவி இயக்குனர்கள் வெளியில் கதை சொல்ல போன இடங்களில் உங்கள் இயக்குனர் இப்படித்தான் இருப்பாராமே, இப்படித்தான் கதை எடுப்பீர்களா? நீங்களும் அப்படித்தான் பேசுவீர்களா? என என் படத்தில் நடிப்பவர்களை கூட என்னை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து நிறைய பேர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருக்கிறது.
இதுதான் உண்மை என்னுடைய படத்தில் வேலை செய்கின்ற நடிகர்களாக இருக்கட்டும், டெக்னிசியன் ஆக இருக்கட்டும், இவர்களெல்லாம் ஒரு வட்டத்துக்குள் இருந்து வருகிறார்கள், இவர்கள் எல்லாம் இப்படித்தான் என்று அவர்களை நடத்தும் விதமே ரொம்ப மோசமாக இருக்கும், இது குறித்து என்னிடம் பாதிக்கப் பட்டவர்களே தெரிவித்துள்ளார்கள், இது அப்பட்டமான உண்மை வெளியில் கூட விசாரித்து கொள்ளலாம், யாரும் இதை மறுக்க முடியாது’’ என அவர் தெரிவித்தார்.