ரஜினிகாந்த், இந்த மிக உயரிய விருது கிடைத்ததற்கு, தன்னுடைய நன்றிகளை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த், இந்த மிக உயரிய விருது கிடைத்ததற்கு, தன்னுடைய நன்றிகளை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது... "இந்திய திரை உலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்பு திறமையை கண்டு பிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனராக நண்பன் ராஜ்பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான, தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகப் பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய, மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்புக்குரிய எதிர்க்கட்சி தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகை நண்பர்களுக்கும் என்னுடைய நலன் நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ்... வளர்க தமிழ் நாடு... ஜெய்ஹிந்த்... என தன்னுடைய அறிக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய, மோடி அவர்களுக்கு, உங்களுடைய வாழ்த்து மிகவும் மதிப்பு மிகக்காது என தன்னுடைய நன்றிகளையும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
