ஜல்லிக்கட்டுக்கு தடை கூடாது…முதன்முதலாக வாய்திறந்த ரஜினி காந்த்..
ஜல்லிக்கட்டுக்கு தடை கூடாது…முதன்முதலாக வாய்திறந்த ரஜினி காந்த்..
தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாமேயொழிய தடை செய்யக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தடைவிதித்ததையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர் கமலஹாசன், டி.ராஜேந்தர், சிம்பு, இயக்குநர்கள் பாராதிராஜா, கரு.பழனியப்பன், அமீர், கவுதமன், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இது குறித்த எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால், சமூக வலைதளங்களில் அவர் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
அவரது இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று ரஜினிகாந்த்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில், பங்கேற்றும் பேசிய ரஜினிகாந்த், தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக் கூடாது என தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் ஆனால் கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது என்று கூறினார்.பெரியவர்கள் நமக்கு விட்டுச் சென்ற கலாச்சாரத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்தார்.