கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை பாவனா அவரது கார் ஓட்டுனராலேயே கடத்த பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார், இதனை கேள்வி பட்ட பலரும் தங்களுடைய வருத்தங்களை தொடர்ந்து பாவனாவிற்கு தெரிவித்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் கேரளா திரையுலகத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நடிகை பாவனா மற்றும் நடிகர் பிரித்திவிராஜ் நடிக்கும் ஆடம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது, இதில் மிகவும் மனஉறுதியோடு நடிகை பாவனா கலந்து கொண்டார், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரித்திவிராஜ் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது...எனது வாழ்வில் நெருக்கடியான சமயங்களில் எனக்கு மிகவும் தோள் கொடுத்தது தைரியம் தான். அந்த தைரியம் எனக்கு பெண்களிடம் இருந்துதான் கிடைத்தது. 

நான் தடம் புரண்ட போது எனது வாழ்க்கையை சரிசெய்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த எனது தாய், மற்றும் 40 மணி நேர பிரசவ வலியை அனுபவித்து மயக்கமருந்து கூட இல்லாமல் சிசேரியன் செய்து குழந்தை வெளியே வரும் வரை வலியை பொறுத்துக்கொண்ட எனது மனைவி, இவர்களின் தைரியத்தை ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லை.

இதேபோல் எனது தோழி பாவனா இன்று படப்பிடிப்புக்கு வந்துள்ள தைரியத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உங்கள் வாழ்க்கையை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே. எந்த ஒரு சம்பவமும் உங்களை கட்டுப்படுத்த கூடாது. பாவனா இன்று படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்று அவர் எடுத்துள்ள முடிவு அவரை எந்த சம்பவமும் கட்டிப்போடவில்லை என்பதை நிரூபித்துள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் முதிர்ச்சியின்மை காரணமாக பெண்கள் மீதான வெறுப்பை போதிக்கும் ஒருசில படங்களில் நடித்துள்ளேன். பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு தரும் காட்சிகளில் நடித்து கைதட்டல் பெற்றுள்ளேன். 

ஆனால் இப்போது நான் ஒரு முடிவு செய்துள்ளேன். இனிமேல் எனது படங்களில் ஒருபோதும் பெண்களை அவமதிக்கும் காட்சிகள் கண்டிப்பாக இருக்காது. எனது படத்தின் கேரக்டர்கள் பெண்களை வெறுக்கும் கேரக்டர்கள் இருந்தாலும் அந்த செயல்களை நியாயப்படுத்த விட மாட்டேன்.

ஆகவே அனைவரும் பாவனாவின் துணிச்சலுக்கு எழுந்து நின்று கைதட்டுங்கள். அவரது துணிச்சல் இனிவரும் காலங்களில் இதே போன்ற ஒரு நிலையை சந்திப்பவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கும். அவர் துணிச்சல் மிக்கவர் என்பதை நிரூபணம் செய்துள்ளார். என் அன்புத்தோழியே உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் ரசிகனாக இருப்பேன். இவ்வாறு நடிகர் பிரித்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.