செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆபாவணன் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  

தமிழ் சினிமாவில் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் ஆகிய படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். இவர் 1999ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் காசோலை செலுத்தி பணம் பெறுவதில், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வங்கியிலிருந்து 69 காசோலைகளை ஆபாவாணன் வாங்கியிருந்தார். அவற்றில் 44 காசோலைகளில் முறைகேடு செய்யப்பட்டது. இதனால் அந்த வங்கிக்கு ரூ.2 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது. இதில் வங்கி அதிகாரிகளும் சேர்ந்து முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் அந்தத் தீர்ப்பு வெளியானது. மோசடியில் ஈடுபட்ட ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், வங்கி தலைமை மேலாளர் மற்றும் உதவி மேலாளருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஆபாவாணனுக்கு ரூ.2.40 கோடி அபராதமும், மேலாளருக்கு ரூ.15 லட்சமும், உதவி மேலாளருக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதித்து திர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை புழல் சிறையில் அனுபவித்து விட்டார் ஆபவாணன், இன்னும் ஒன்றை ஆண்டு சிறை தண்டனையை அவர் கழிக்க வேண்டி இருக்கிறது.