திரைத்துறையில் பணியாற்றும் நடிகைகள், கலைஞர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் யூடியூபர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் மனு.
சமூக வலைதளங்களில் திரைப்பட, சின்னத்திரையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தொடர்பாக தொடர்ந்து ஆவேசமாகப் பேசி வரும் யூடியூபர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், “யூடியூப் சேனலில் பாண்டியன் என்பவர் தொடர்ந்து அவதூறான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்.
குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் வீடியோகளை பகிர்ந்து வருகிறார். பொய்யான செய்திகளை உண்மையானது போல் எவ்வித ஆதாரமும் இன்றி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். பாலியல் குற்றச்சாட்டில் முன்னணி நடிகர்களின் அந்தரங்க லீலைகள், தாய் முன்பாகவே மகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வீடியோகள் தமிழா தமிழா யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் கலை உலகம் என்பது ஒரு சாக்கடை, கோடம்பாக்கம் பல பாலியல் குற்றங்களை உண்டாக்கும் சங்கம் என்று பல்வேறு அவதூறுகளை பேசி வருகிறார். டிஜே, சின்னத்திரை நடிகைகள், மேக்கப் ஆர்டிஸ்ட்கள் என திரைத்துறையில் உள்ள அனைவர் தொடர்பாகவும் இழிவாக பேசி வருகிறார்.
திரைத்துறையில் உள்ளவர்கள் அனைவரும் பண்ணை வீட்டில் இருந்து சின்னத்திரைக்கு வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அவதூறான வீடியோகளை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் ஆபாசமாக பேசி வீடியோகளை பகிர்ந்து வந்த யூடியூப் சேனலையும் தடை செய்ய வேண்டும்” என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
