Etharkkum Thunindhavan : தியேட்டரில் புகுந்து பாமக-வினர் ரகளை! எதற்கும் துணிந்தவன் பட காட்சி ரத்து - இது எங்க?
Etharkkum Thunindhavan : எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட பாமக எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், நேற்று முதல் தி நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜெய் பீம் சர்ச்சை
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கி இருந்த இப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பழங்குடியின மக்கள் சந்திக்கும் இன்னல்களை தோலுரித்துக் காட்டி இருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றாலும், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது.
பாமக எதிர்ப்பு
குறிப்பாக இப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளதாக கூறி பாமக-வினர் இப்படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்ததால் படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை படக்குழு மாற்றி அமைத்தது. இருந்தபோது சூர்யா தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு
தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட பாமக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் தி நகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாமக-வினர் ரகளை
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சரவணா திரையரங்கில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமக-வினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படக்காட்சியை ரத்து செய்வதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...