பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறினாலும், ‘ரைட்டிங் வித் பயர்’ என்கிற ஆவணப்படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.
உலக அளவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையை சார்ந்த ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். ஹாலிவுட் படத்தில் பணியாற்றியதற்காக ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி போன்ற இந்திய நட்சத்திரங்கள் ஆஸ்கர் விருதை வென்றிருந்தாலும், இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்த ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த சூர்யாவின் ஜெய் பீம், மோகன்லால் நடித்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறினாலும், ‘ரைட்டிங் வித் பயர்’ என்கிற ஆவணப்படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ரின்டு தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம் மொத்தமாகக் கலந்து கொண்ட 138 படங்களிலிருந்து ஷார்ட் லிஸ்ட் ஆன 15 படங்களில் இடம்பெற்றது. பின்னர் அதிலிருந்து தேர்வாகி இறுதிப் போட்டியில் இடம்பெறும் 5 படங்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறது ‘ரைட்டிங் வித் பயர்’.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான சுஷ்மித் கோஷ் கூறுகையில், “இந்திய ஆவணப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்வாவது இதுவே முதல் முறை. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்திய சினிமாவுக்கே இது ஒரு மிகமுக்கியமான தருணம். ‘ரைட்டிங் வித் பயர்’ ஆவணப்படம் தலித் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றியது. வலிமை என்றால் என்ன என்பதையும், இந்தக் கால பெண்களைப் பற்றிய படமாகவும் இது உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
