புதுப்படங்கள் ரீலீஸ் இல்லாததால் காத்தாடும் தியேட்டர்கள்… காட்சிகளும் ரத்து !!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதிய படங்கள் எதுவும் ரீலீஸ் செய்யப்படவில்லை. எனவே பழைய திரைப்படங்களே தொடர்ந்து திரையிடப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் கூட்டமே இல்லாமல் காத்தாடுகிறது.
சினிமா தியேட்டர்களில் புதிய திரைப்படங்களை திரையிட கியூப், யூஎஃப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டணத்தை குறைப்பதுவரை புதிய படத்தை வெளியிடுவது இல்லை என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனால் கடந்த 2 நாட்களாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் புதிய படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று பவித்ரன் இயக்கிய ‘தாராவி’ படம் மட்டும் தடையை மீறி வெளியானது.
இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. புதிய படங்கள் வெளியாகாததால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த படங்களையே தியேட்டர் அதிபர்கள் தொடர்ந்து திரையிட்டார்கள். அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஒரு சில தியேட்டர்களில் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் இதே கோரிக்கைக்காக புதிய படங்களை வெளியிடாமல் பட அதிபர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.