இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க  உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உரிய ஆதாரங்களின்றி கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

எனவே, இளையராஜா 75 நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடையில்லை. மேலும், கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.