ரஜினி தான் முதல்வராக போட்டியிட்டால் அவர் பின்னால் நிற்பேன்... ராதாரவி பேச்சால் அதிமுகவில் சலசலப்பு..!
ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் அவர் பின்னால் நான் நிற்கத் தயார் என அதிமுகவின் முக்கியப் பிரமுகரான ராதாரவி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் அவர் பின்னால் நான் நிற்கத் தயார் என அதிமுகவின் முக்கியப் பிரமுகரான ராதாரவி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கட்சியில் தொடர்ந்து இருந்து வந்த நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பிரச்சனைகளால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. தற்போது பாஜக மற்றும் அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கூட ரஜினி அரசியலுக்கு வருவார், ஆட்சி அமைப்பார் என்பது போல தொடர்ந்து பேசி வருகின்றன. சமீபத்தில் நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், கராத்தே தியாகராஜன் தனது பிறந்தநாளை இன்று தனது இல்லத்தில் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய ராதாரவி கராத்தே தியாகராஜன் என்றால் நட்பு என்று அர்த்தம். எந்த ஒரு விஷயம் என்றாலும் ஓடிவந்து உதவுவார். எனது தாயார் மரணம், சரத்குமார் அண்ணன் மரணம் உள்ளிட்ட பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர் எங்கே இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டார். யார் அழைத்தாலும் ஓடிவந்து உதவுவார்.
மேலும் பேசிய அவர், ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். நான் அதிமுகவில் இருக்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுக, பாஜக எல்லாம் ஒரே கூட்டணிதான். இதில் ரஜினியும் இணையும்போது ஒன்றாக பணியாற்றுவோம் என்றார்.