மும்பையில் பிரபல இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் ரூ.40 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரபோர்த்தியின் அலுவலகத்தில் ரூ.40 லட்சம் திருடிய திருடனை மும்பை போலீசார் கைது செய்தனர். மலட் போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளியான ஆஷிஷ் பூட்டிராம் சாயல் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட பணத்தில் 95 சதவீதம் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. 32 வயதான சாயல், ப்ரீதம் சக்ரபோர்த்தியின் ஸ்டுடியோவில் ஒன்பது வருடங்களுக்கும் மேலாக பியூனாக வேலை செய்து வந்துள்ளார்.

பிப்ரவரி 4-ம் தேதி சாயல் ஸ்டுடியோவில் இருந்து 40 லட்சம் ரூபாய் இருந்த பையை திருடியதாக கூறப்படுகிறது. அவர் ப்ரீதமின் வீட்டிற்கு பணத்தை டெலிவரி செய்யப் போவதாகக் கூறிவிட்டு, பணத்துடன் தப்பி ஓடிவிட்டார். ப்ரீதமின் மேலாளர் வினீத் சேதா மலட் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மலட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, சேதா சில நாட்களுக்கு முன்பு வேலை சம்பந்தமான காரணங்களுக்காக பணத்தைப் பெற்று அலுவலகத்தில் வைத்திருந்தார். சாயல் அந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்தார். சேதா சில ஆவணங்களில் கையெழுத்து வாங்க ப்ரீதமின் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தார்.

திரும்பி வந்த சேதா, 40 லட்சம் ரூபாய் இருந்த பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சாயல் அந்த பையை எடுத்துக்கொண்டு ப்ரீதம் வீட்டிற்கு டெலிவரி செய்யப் போவதாகச் சொன்னதாக அலுவலக ஊழியர்கள் அவரிடம் தெரிவித்தனர். ஆனால் சேதா சாயலை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சேதா சாயலின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவர் அங்கிருந்து தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சேதா உடனடியாக மலட் காவல் நிலையத்தை அணுகி முறைப்படி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அப்பகுதியில் இருந்த 150 முதல் 200 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் திருடனை கண்டுபிடித்து சாயலை முக்கிய குற்றவாளியாக அடையாளம் காண முடிந்தது. திருடப்பட்ட பணத்தில் 95 சதவீதத்தை மலட் போலீசார் மீட்டுள்ளனர். இந்த திருட்டு குறித்து மேலும் விவரங்களை கண்டறிய அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.