Mersal all set to beat Rajinikanth Kabali

மெர்சல் திரைப்படத்துக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருந்தால் சக்சஸ் பார்ட்டியைக் கண்டிருக்கலாம். விஜய் ரசிகர்கள் 100 கோடி, 200 கோடி என்று சொல்வதைக் கேட்டிருந்திருக்கலாம். மெர்சலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் இதெல்லாம் காணவில்லை. ஆனால், மெர்சல் சர்ச்சை அதன் வசூலை பலமடங்காக அதிகப்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என மூவர் நாயகிகளாக நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நிலையிலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என தென்னிந்தியாவிலும், மற்ற பிற வெளிநாடுகளிலும் வசூலில் அபார சாதனை படைத்து வருகிறது. தமிழில் ரஜினி அல்லாத மற்ற நடிகர்களின் படவசூலை முறியடித்துள்ள மெர்சல், சிங்கப்பூரிலும், இங்கிலாந்திலும் கபாலி படத்தின் வசூலை நெருங்கி வருகிறது. 2-வது வார இறுதியில் மெர்சல், சுமார் ரூ.200 கோடி வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

முதல் நாளில் 43.5 கோடிகள் வசூலித்த திரைப்படம் அடுத்த நான்கு நாள்களில் 86.5 கோடிகள் மட்டுமே வசூலித்திருக்கிறது. எனவே, ஏற்கெனவே தியேட்டரிலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களையும் பார்த்தவர்கள் மெர்சல் திரைப்படத்தை மீண்டும் தியேட்டருக்குச் சென்று பார்ப்பார்களா என்றும், தற்போது மாத இறுதியில் இருக்கிறோம் என்பதையும், மக்கள் ஏற்கெனவே தீபாவளிக்கு செலவழித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் 200 கோடிக்கு மீதமிருக்கும் 20 கோடிகளை வசூல் செய்யவே மெர்சல் திரைப்படம் சிரமப்பட வேண்டும்.