Maanaadu : சர்வதேச பட விழாவில் 5 விருதுகளை வென்று கெத்து காட்டிய மாநாடு.. ஆனா சிம்புவுக்கு மட்டும் விருது இல்ல
மாநாடு படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், நடிகர் சிம்புவுக்கு விருது கிடைக்காதது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கியது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடினர். தற்போது 50 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த மாநாடு திரைப்படம், அடுத்ததாக தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் ராணாவின் தந்தை கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், மாநாடு படம் நார்வேயில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில், போட்டி பிரிவில் திரையிடப்பட்டது. அதில் சிறந்த இயக்குனருக்கான விருதை வெங்கட் பிரபுவும், சிறந்த வில்லனுக்கான விருதை நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை யுவன் சங்கர் ராஜாவும், சிறந்த படதொகுப்பாளருக்கான விருதை பிரவீன் கே.எல்.லும் வென்றுள்ளார்கள்.
மேலும் மாநாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நீண்டகால கலைச்சேவையை பாராட்டி, ‘கலைச்சிகரம்’ விருதும் வழங்கப்பட்டுள்ளது. மாநாடு படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், நடிகர் சிம்புவுக்கு விருது கிடைக்காதது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.