BiggBoss 5 : காதல் விவகாரத்தில் குறும்படம் போட சொன்ன கமல்... ஷாக் ஆன பாவனி - பிக்பாஸில் தரமான சம்பவம் இருக்கு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் இன்றைய எபிசோடில் குறும்படம் போடப்பட உள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் போடியாளர்களாக பங்கேற்றுள்ள அபிநய்யும், பாவனியும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது.
அபிநய்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அதேபோல் பாவனியும் திருமணமாகி கணவரை இழந்துள்ளார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகுவதை பார்த்த சக போட்டியாளரான ராஜு, அபிநய்யிடம் நீங்க பாவனிய லவ் பண்றீங்களா? என நேரடியாகவே கேட்டார்.
ராஜுவிடம் இருந்து இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய், என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று திகைத்துப்போனார். பின்னர் இல்லை என்று கூறினார். இதையடுத்து இந்த விஷயம் பூதாகரமானது. கடந்தவாரம் நடந்த மாநாடு டாஸ்கிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த காதல் சர்ச்சைக்கு இதுவரை மவுனம் காத்து வந்த கமல், இந்த வார எபிசோடில் நேரடியாக விவாதித்தார். அப்போது பாவனிக்கு அபிநய் மீது காதல் இருந்ததாகவும், அதை அவரே தன்னிடம் கூறியதாகவும் ராஜு கூறினார். இதைக்கேட்டு ஷாக்கான கமல், பாவனி என்ன சொன்னார் என்பதை சக போட்டியாளர்களுக்கு விளக்கும் விதமாக குறும்படம் ஒன்றை போட அறிவுறுத்துவது போல் புரோமோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குறும்படம் போட உள்ளதால் இன்றை எபிசோடுக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.