பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஆஸ்கர் குழு... இரவின் நிழல், காந்தாரா உள்பட 10 இந்திய படங்கள் தகுதி
ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ள பரிந்துரை பட்டியலில் இரவின் நிழல், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா உள்பட மொத்தம் 10 இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.
சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக போட்டியிடும் படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் 10 இந்திய திரைப்படங்களும் தேர்வாகி உள்ளன. அதன்படி ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும், ரிஷ்ப ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படமும், பார்த்திபனின் இரவின் நிழல் படமும், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படமும் தேர்வாகி உள்ளன. இதுதவிர கங்குபாய் கத்தியவாடி மற்றும் தி காஷ்மீர் பைல்ஸ் ஆகிய இந்தி படங்களும், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட குஜராத்தி படமான தி செல்லோ ஷோ படமும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று உள்ளன. மேலும் மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய படங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... விஜய், அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான்... ஆனா ரஜினி?- சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு புது விளக்கம் கொடுத்த மோகன்
இரவின் நிழல் திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அறிந்த அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். டுவிட்டரில் அதுகுறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “அந்த மஹா சமுத்திரத்தில் இந்த எளியவனின் படம் எலிஜிபில் லிஸ்ட் வரை வந்ததே வரம் தான். அதுவும் ஒரு R(upee) கூட செலவழிக்காமல், RRR-க்கெல்லாம் பல cR செலவழித்து campaign செய்கையில்!!” என தனக்கே உரித்தான நக்கலுடன் அந்த பதிவை போட்டுள்ளார் பார்த்திபன்.
அதேபோல் காந்தாரா திரைப்படம் இரண்டு பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளதை அடுத்து அப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் டுவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் இந்த பயணம் அடுத்த கட்டத்திற்கு செல்லவதை காண ஆவலோடு இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டி.. வாரிசு படத்தை பிரபலப்படுத்தும் விஜய் ரசிகர்கள்