தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட கமல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பதியப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள 'மக்கள் நீதி மய்யம்' கட்சி அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று தொண்டர்கள் மத்தியில் கொடியேற்றி உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக தான் செயல்படுவதாகவும்,துணை தலைவராக பேராசிரியர் ஞானசம்பந்தனையும், பொதுச்செயலாளராக அருணாச்சலத்தையும், பொருளாளராக சுரேஷையும் அறிவித்தார்.
நிகழ்ச்சியின் இடையே, சட்டமன்ற பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். மேலும் உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாகவும், அவர்கள் 11 பேரும் செயற்குழுவில் செயல்படுவார்கள் என்றும் கூறினார். மண்டலக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று தெரிவித்த கமல், மாவட்ட நிர்வாகிகளை அறிவித்த அவர், சில மாவட்டங்களுக்கு விரைவில் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக கட்சி அலுவலகத்தின் வெளியே சிறிய அளவில் மேடை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தொடண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டதால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் 'போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதற்காக நடிகர் கமல்ஹாசன் பொதுமக்கள் இடையே மன்னிப்பு கோரியுள்ளார்.