“அரசியலில் கறை படியாது வாழ்ந்தவர்”... எம்.பி. வசந்தகுமார் மறைவிற்கு கமல் ஹாசன் இரங்கல்...!
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் எச்.வசந்தகுமார் மறைவிற்கு தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆகஸ்ட் 10ம் தேதி அன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல் நிலையில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக இருந்த எச்.வசந்த குமாரின் உடல் நிலை இன்று மேலும் மோசமானது. நுரையீரல் செயலிழக்கும் அளவுக்கு சென்றதால், அவரைக் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் இன்று மாலை 6.56 மணிக்கு உயிரிழந்தார். வசந்தகுமார் மரணத்துக்கு பல தலைவர்களும் இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் எச்.வசந்தகுமார் மறைவிற்கு தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.