பிரதமரையே உடைந்து அழவைத்த கானக்குயில்... லதா மங்கேஷ்கரின் பாடலால் நேரு கண்ணீர் சிந்திய தருணம்! மறக்க முடியுமா?
lata mangeshkar : இந்தியா - சீனா இடையேயான போரின் விளைவாக மனமுடைந்து துயரத்தில் ஆழ்ந்திருந்த நேரு, லதா மங்கேஷ்கரின் பாடலைக் கேட்டு கண்கலங்கினார்.
இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கியவர் லதா மங்கேஷ்கர். தனது தேனிசைக் குரலால் அரை நூற்றாண்டாக ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் லதா. அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரைப்பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
1962-இல் இந்தியா சீனா போரில், இந்திய இராணுவம் பின் வாங்க நேரிட்டது. அப்போது இந்திய வீரர்களை உற்சாகப் படுத்தவும், தேசபக்தி உணர்வைத் தூண்டச் செய்யவும் ஒரு பாடலை லதா மங்கேஷ்கர் உருவாக்கி இருந்தார். எந்த படத்திலும் இடம்பெறாத இந்த பாடலை கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய பிரதமர் நேருவின் முன்னிலையில், லதா மங்கேஷ்கர் பாடினார்.
இந்தியா - சீனா இடையேயான போரின் விளைவாக மனமுடைந்து துயரத்தில் ஆழ்ந்திருந்த நேரு, லதா மங்கேஷ்கரின் பாடலைக் கேட்டு கண்கலங்கினார். எந்த படத்திலும் இடம்பெறாத ‘ஆயே மேரே வடான் கி லோகோ’ என்கிற தேசபக்தி பாடலை, லதா மங்கேஷ்கர் பாடிய விதம், நேருவை மனமுருகி கண்கலங்க வைத்ததாம்.
உலகம் முழுவதும் தனது பாடல்களால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த லதா மங்கேஷ்கர் இந்த உலகை விட்டு மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் ரசிகர்கள் மனதில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6:30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.