நடிகர் ஜே.கே.ரித்தீஷின் சொத்துக்ளை அபகரிக்கும் முயற்சியாக அவரது நண்பர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது மனைவி ஜோதீஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பியும், அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரித்தீஷின் மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு அவரது நண்பர்களால் நிறைய மிரட்டல் வருவதாக ரித்தீஷின் மனைவி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரித்தீஷின் நண்பரான பாவா என்பவர் ரித்தீஷ் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுவதாக சொல்லப்படுகிறது. 

அதாவது கடந்த ஜனவரி மாதம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்பிரமணி என்பவரிடம் இருந்து வாங்க ரித்தீஷ் ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர். 

இதற்காக சுமார் 4 கோடி ரூபாய் வரை சுப்பிரமணிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சொத்தை வாங்குவதற்கு முன்பே ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டதால், சுப்பிரமணியிடம் கொடுத்த முன்பணத்தை ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி கேட்டுள்ளார். 

இதற்கு அந்த பணத்தை ஜோதிஸ்வரியிடம் கொடுப்பதாக சுப்பிரமணியும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த 25 கோடி மதிப்பிலான சொத்தை ரித்தீஷின் நண்பரான ஆதம்பாவா அபகரிக்க முயல்வதாக ஜோதிஸ்வரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

மேலும் ரித்தீஷின் நண்பர் ஆதம்பாவா திடீரென திருவான்மியூர் மற்றும் தியாகராயநகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜே.கே .ரித்தீஷின் பல கோடி சொத்துகளை அபகரிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் ஜே.கே.ரித்தீஷ் மனைவி கூறியுள்ளார்.