Iruttu arayil Murattu kuthu bharathiraja condumned

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இலைமறைக் காயாகச்சொல்லப்பட்ட விஷயங்களை இலை போட்டுப் பரிமாறுகிறார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபகாலங்களாக சில தரங்கெட்ட படங்களால் நம்தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியமும் இதிகாசமும் சராசரி மனிதவாழ்க்கையையும் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று சதையைமட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்து போய்க் கிடக்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

கொண்டாட வேண்டியத் திரைப்படங்கள் இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறைக் காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள்.

தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை. தமிழ் மக்களே, ரசனை மாற்றமென்று தரங்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடைக்கும் ஒரு திரைப்படம், நம்தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசை திருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதையதமிழகத்தின் பிரச்சனைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது.

இவர்களுக்குத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் துணை போவதால்தான் ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும்.

ஏன் இதற்கு மேலேயும் நடக்கும். இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும்.மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டுஎன்ன செய்துகொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக்கூட கத்திரி போட்ட நீங்கள் சமீபகாலமாக ஆபாசமான படங்களுக்கு அனுமதியளிப்பது ஏன்? இரண்டாம் தரமான படைப்புகளை மறுபரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால் சென்சாரையே சென்சார் செய்ய வேண்டியநிலை ஏற்படும் என்று தனது அறிக்கையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.