3 பேரை காவு வாங்கிய "இந்தியன் 2" கிரேன் விபத்து... கிரேன் ஆப்ரேட்டருக்கு ஜாமீன்...!
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
கடந்த 19ம் தேதி இரவு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங், சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று கொண்டிருந்தது. இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
திரையுலகையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கு கிரேன் பாராம் தாங்காமல் அறுந்து விழுந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து படப்பிடிப்பின் போது போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாக கூறி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மீதும், கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை கடந்த 21ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜன் ஜாமீன் கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று மனுவை விசாரித்த நீதிமன்றம் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் இன்று வரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.