இயக்குநர் ஷங்கரை விடாமல் விரட்டும் லைகா... பிற படங்களை எடுக்க தடை கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு...!
இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.
நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தில் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் லைக்காவின் மனுவில் தெரிவிக்கப்பட்டு மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அதே சமயம் மனு மீது இன்று ஷங்கர் விளக்கமளிக்கவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் பிறப்படங்களை எடுக்க தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதி தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தியன் -2 பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. பலகோடி செலவு செய்துள்ளதால் இந்தியன்-2 படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.