ilaiyaraja field the case in smool app

இணையதளத்தில் தற்போது புதிதாக வந்துள்ள புதிய செயலி (ஆப்) ஸ்மூல். இதன் மூலம் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரசிகர்கள் அதன் ஒரிஜினல் இசையுடன் பாடி பதிவேற்றம் செய்ய முடியும். இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற ஒன்றாக்த் திகழ்கிறது.

இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களை ரசிகர்கள் அதிகம் பாடி பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இந்தச் செயலி மூலம் சில பாடல்களை மட்டுமே இலவசமாகப் பாட முடியும். மற்ற பாடல்களைப் பாட மாதம் ரூ.110 ஸ்மூல் செயலிக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு இளையராஜா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, ஸ்மூல் செயலிக்கு மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்மூல் நிறுவனம், தனது செயலியிலிருந்து இளையராஜா பாடல்களை ஒவ்வொன்றாக நீக்கி வருகிறது. 



இது குறித்து இளையராஜா தரப்பில் கூறப்படுவதாவது: இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு சொந்தமானதுதான். யூடியூப், வாட்ஸ் அப் மூலம் இளையராஜா பாடல்களை பதிவேற்றியும் கேட்டும் வருகிறார்கள். அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு யாரும் தடை போடவில்லை. ஆனால் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதையே எதிர்க்கிறோம். அவரின் 35 வருட உழைப்பை யாரும் சுரண்ட அனுமதிக்க முடியாது. இது குறித்து ஸ்மூல் செயலியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்களின் விளக்கத்திற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.