பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு!! இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு!!
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததாக, தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததாக, தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று இறுதி நிலைக்கே வந்து விட்டது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் படப்பிடிப்பை துவங்கிய மணிரத்னம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.
இந்த படத்தில் ராஜராஜ சோழன், கரிகாலன் போன்ற வேடங்களில் நடித்த, ஜெயம் ரவி மற்றும் விக்ரம் ஆகியோர் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை தாய்லாந்து நாட்டில் துவங்கிய இயக்குனர் மணிரத்னம் அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார்.
அந்த வகையில் கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில், குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து, இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், இது குறித்து விலங்குகள் நல வாரியம் விசாரணை செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், குதிரை உயிரிழந்ததற்காக தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் இறுதி கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக மத்திய பிரதேசத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.