லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் கட்டுமாறு நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் லைகா நிறுவன பிரச்சனை
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றார். விஷால் வாங்கிய இந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு திருப்பி செலுத்தியது. ஆனால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை விஷால் திருப்பித் தரவில்லை. மேலும் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து உரிமங்களும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
லைகாவின் ஒப்பந்தத்தை மீறிய விஷால்
ஆனால் லைகா நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி விஷால் படங்களை வெளியிட்டதாக கூறி பணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. தொகையை செலுத்தாவிட்டால் வழக்கு முடியும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடியில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்
ஆனால் விஷால் டெபாசிட் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் பணத்தை செலுத்தாததாலும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும் விஷால் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கூறியிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி ஆஷா நேரில் ஆஜரான விஷாலுக்கு கண்டனத்தை தெரிவித்தார். தொடர்ந்து விஷால் தன்னுடைய சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், மூன்று கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்கு ஆவணங்களும், சொந்த வீட்டின் கடன் தொடர்பான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
விஷாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விசாரணை முடிந்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடியே 29 லட்ச ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷாலுக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு செலவு தொகையையும் வழங்க விஷாலுக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
