டில்லியில் உள்ள ஆசியன் கேம்ஸ் விளையாட்டு கிராமத்தில் வசித்து வந்த 90 வயதான ஒடிசி கலைஞரை செவ்வாய்க்கிழமை அரசு விடுதியிலிருந்து வெளியேற்றிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயாதர் ராவத் ஒடிசி நடனக் கலைஞர், நடன இயக்குனர் மற்றும் குரு ஆவார்.கட்டாக் மாவட்டத்தில் உள்ள காந்தபென்ஹாரா கிராமத்தில் அஹிர் குடும்பத்தில் பிறந்த ராவுத் , பின்னர் கலாக்ஷேத்ராவில் ருக்மணி தேவி அருண்டேல் என்பவரால் ஒடிசியின் குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் கீழ் நடனப் பயிற்சி பெற்றவர். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்; மகள் மதுமிதா ரவுத் ஒடிசி நடனக் கலைஞரும் கூட.
ஒடிசிக்கு கிளாசிக்கல் ' சாஸ்திரம் ' அடிப்படையிலான அந்தஸ்தை வழங்குவதில் மாயாதர் ராவத் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவருக்கு கடந்த 2010 இல்ஆண்டும் அன்றைய குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.. பின்னர் அரசு உத்தரவின் படி இவர் ஆசிய விளையாட்டு கிராமத்தில் உள்ள அரசு குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டார்.

முன்னதாக 1980-களில் இருந்து, 40-70 வயதுக்கு இடைப்பட்ட தேசிய கலைஞர்களுக்கு, 3 ஆண்டு காலத்திற்கு அரசு சார்பில் வாடகைக்கு தங்குமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டன. அதன் பின்னர், 2020-ம் ஆண்டு இந்த குடியிருப்புகளை காலி செய்யுமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது ஆனால் அந்த வழக்கு தோல்வியடைந்த பிறகு ராவத் மற்றும் பிற கலைஞர்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் தங்குமிடத்தை காலி செய்ய ஏப்ரல் 25 ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டது.

அதன்படி கடந்த செவ்வாய்கிழமை ராவத் உள்பட பல கலைஞர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய அரசு அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை சாலையில் போட்டனர். நலிவுற்ற நடனக் கலைஞர் தனது வீட்டின் வெளியே வாக்கிங் ஸ்டிக்குடன் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பத்மஸ்ரீ விருதும் கூட தெருவில் கிடப்பதைக் காண முடிந்தது. இவ்வாறு பத்ம ஸ்ரீ விருது பெற்ற கலைஞர் மிக மோசமாக நடத்தப்பட்டது குறித்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
