KPAC Lalitha: உயிருக்கு போராடும் பிரபல நடிகைக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்த ரசிகர்.... நெகிழ்ச்சி சம்பவம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை கே.பி.ஏ.சி.லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
மலையாள திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வந்தவர் நடிகை கே.பி.ஏ.சி.லலிதா. தமிழ்நாட்டில் மனோரமா போன்று இவர் மலையாளத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் விஜய்யின் காதலுக்கு மரியாதை, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, காற்று வெளியிடை, அஜித்தின் கிரீடம், விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பரதனின் மனைவி ஆவார்.
73 வயதாகும் நடிகை லலிதா, கல்லீரல் பிரச்சனை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவரது மருத்துவ செலவை ஏற்பதாக கேரள அரசு அறிவித்திருக்கிறது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து லலிதாவிற்கு கல்லீரல் தானம் செய்யக் கோரி, அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் நடிகை லலிதாவின் தீவிர ரசிகரான கலாபவன் சோபி என்பவர் அவருக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். 54 வயதாகும் கலாபவன் சோபி, ‘தனக்கு குடிப்பழக்கம், மது பழக்கம் எதுவும் கிடையாது என்பதால் தன்னுடைய கல்லீரல் கண்டிப்பாக லலிதாவுக்கு பொருந்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.