இயக்குநர் விக்ரமனின் உறவினரது இரு சக்கர வாகனம் திருட்டு; போலீசில் புகார்!
இயக்குநர் விக்ரமன் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உறவினரது இரு சக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் குடும்ப கதையை மையப்படுத்தி ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். சரத்குமார் நடித்த சூர்யவம்சம், விஜய் நடித்த பூவே உனக்காக, விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல என்று மாஸான படங்களை கொடுத்துள்ளார். இவர், தற்போது சென்னை அசோகர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த ருக்குமணி என்பவர் விக்ரமனின் உறவினர். இவர் தான் தனது குடும்பத்தோடு அவரது வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று காலை 11 மணியளவில் விக்ரமனின் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை எடுக்க வெளியில் வந்துள்ளார். ஆனால், அப்போது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து தனது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை விக்ரமன் ஆய்வு செய்த போது அதில் 2 இளைஞர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வந்து இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ருக்குமணி குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குநர் விக்ரமன் கூறியிருப்பதாவது: இது போன்ற சம்பவம் இதுவரையில் நடந்ததில்லை. தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்த நிலையில் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.