4 மொழிகளில் ஹிட்... ஏழு வருடங்கள் தலைமறைவாக இருந்த இயக்குநர்... சூர்யா, கார்த்தி காரணமா?
மவுன குரு என்ற ஒரு தரமான படத்தை இயக்கிவிட்டு ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இயக்குநர் சாந்தகுமார் இன்று தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.
மவுன குரு’ என்ற ஒரு தரமான படத்தை இயக்கிவிட்டு ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இயக்குநர் சாந்தகுமார் இன்று தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.
அருள்நிதி, இனியா நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் ‘மவுன குரு’. விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலையும் கண்டது. இதே படத்தின் இந்தி ரைட்ஸ் உரிமையை சாந்தகுமாரிடம் ’முறையாகப் பெற்று’ ஏ.ஆர்.முருகதாஸ் ’அகிரா’ என்ற பெயரில் இந்தியில் இயக்கியிருந்தார். முறையே கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ‘குரு’, சங்கரா’ என்ற பெயர்களில் ரீமேக் பண்ணப்பட்டு இப்படம் பெரும் வெற்றி கண்டது. ஆனால் சாந்தகுமாருக்கு அடுத்த படம் கிடைப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளது.
இவரை இவ்வளவு வருடம் காக்க வைத்ததில் பெரும்பங்கு அண்ணன் தம்பிகளான சூர்யாவுக்கும் கார்த்திக்கும் உண்டு என்று செய்திகள் இருந்த நிலையில் அதற்கு பிராயச்சித்தமாக, ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘மகாமுனி’என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குநரின் முதல் படமான ‘மவுன குரு’ போலவே இப்படமும் க்ரைம் த்ரில்லர் வகையறாதான் என்பதை படத்தின் டைட்டிலை வைத்தே யூகிக்க முடிகிறது.
இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுபெற்ற விஜே சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.