ரஜினியின் அடுத்த படம் ''ஹாஜி மஸ்தான் கதை இல்லை'' இயக்குனர் ரஞ்சித் விளக்கம்
தனுஷ் நிறுவனமாக வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ரஜினி நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.
அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா இது சம்பந்தமாக ரஜினிகாந்த்க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.
குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.
இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் ரஞ்சித், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது 'ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல' என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 'ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை' என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்.